ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக சாட்சி சொல்ல வற்புறுத்தும் சி.ஐ.டி.

சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிரான வழக்கில் சாட்சியம் வழங்குமாறு எதிர்காலத்தில் அவ்வழக்கின் சாட்சியாளர்களாகக் கூடிய வாய்ப்புள்ள  சிலரை  குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வற்புறுத்தி வருவதாக சிரேஷ்ட சட்டத்தரணி சமிந்த அத்துகோரள புத்தளம்  மேல் நீதிமன்றுக்கு  அறிவித்துள்ளார்.

சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட இருவருக்கு எதிரான வழக்கு விசாரணை நேற்று முதல் தடவையாக விசாரணைக்கு வந்தது.

நகர்த்தல் பத்திரம்:

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வின் சட்டத்தரணிகள் தாக்கல் செய்த நகர்த்தல் பத்திரத்துக்கு அமையவே குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இதன்போதே மேற்படி விடயம் சிரேஷ்ட சட்டத்தரணி சமிந்த அத்துகோரளவினால் நீதிமன்றில் முன் வைக்கப்பட்டது.

வழக்கை விசாரிக்க தனியான நீதிபதி நியமனம்:

இவ்வழக்கை விசாரிக்கவென விஷேடமாக நியமிக்கப்பட்டுள்ள சிலாபம் மேல் நீதிமன்றின் நீதிபதி குமாரி அபேரத்ன, புத்தளம் மேல் நீதிமன்றுக்கு வருகை தந்த நிலையில், அவர் முன்னிலையிலேயே இவ்வழக்கு விசாரணைக்கு வந்திருந்தது.

ஐந்து குற்றச்சட்டுக்கள்:

சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ், புத்தளம்  அல் சுஹைரியா மத்ரஸா பாடசாலையின் அதிபர் மெளலவி சலீம் கான் மொஹம்மட் சகீல்  ஆகியோரே இவ்வழக்கின்  பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு எதிராக 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடை சட்டத்தின்   கீழும்,  2007 ஆம் ஆண்டின் 57 ஆம் இலக்க சிவில், அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் கீழும் 5 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
இந் நிலையில், கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ், சி.ஐ.டி. மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளின் பொறுப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரை உடனடியாக நீதிமன்றில் ஆஜர் செய்து, அவருக்கு எதிரான குற்றப் பத்திரிகையை கையளித்து வழக்கை விசாரிக்க  நகர்த்தல் பத்திரம் ஊடாக, ஹிஜாஸின் சட்டத்தரணிகள் கோரியிருந்தனர்.

வழக்கு விசாரணைக்கு வந்த போது, சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட இரு பிரதிவாதிகள் சார்பிலும், சிரேஷ்ட சட்டத்தரணி சமிந்த அத்துகோரல தலைமையில் சிரேஷ்ட சட்டத்தரணிகளான ஹபீல் பாரிஸ், நுவன் போப்பகே, நிரோன் அங்கிடெல் உள்ளிட்ட சட்டத்தரணிகள் ஆஜராகினர்.
சட்ட மா அதிபர் சார்பில் புத்தளம் நீதிமன்றின்  அரச சட்டவாதி ஆஜரானார்.

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழான வழக்கென்பதால் முன்னுரிமை கொடுத்து விசாரணைக்கு எடுக்கவும்:

இதன்போது மன்றில் வாதங்களை முன் வைத்த சிரேஷ்ட சட்டத்தரணி சமிந்த அத்துகோரள,
‘ விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட இருவர் தொடர்பிலான வழக்கானது. , பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே அச்சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எனும் ரீதியில் முன்னுரிமை அளித்து உடனடியாக அவ்வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும். அதன்படி அவரை மன்றுக்கு அழைத்து குற்றப் பத்திரிகையை  கையளிக்க வேண்டும்.

சி.ஐ.டி.யின் வற்புறுத்தல்:

தற்போதும் விளக்கமறியலில் உள்ள பிரதிவாதிகளுக்கு  குறிப்பாக வழக்கின் முதல் பிரதிவாதிக்கு  எதிராக சாட்சியமளிக்குமாறு,  இவ்வழக்குடன் தொடர்புபடாத எனினும் எதிர்காலத்தில் இவ்வழக்கின் சாட்சியாளர்களாக மாற வாய்ப்புள்ள நபர்கள் கைது செய்யப்பட்டு சி.ஐ.டி.யினரால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். அது குறித்து உயர் நீதிமன்றிலும்  மனு தாக்கல் செய்துள்ளோம்.
இவ்வாறான ஒரு பின்னணியிலேயே, நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒருவருக்கு எதிராக வழக்கு விசாரணைகளை உடன் ஆரம்பிக்கவும் அவரை மன்றுக்கு அழைத்து குற்றப் பத்திரிகையை கையளிக்கவும் கோருகின்றேன்.’ என   தெரிவித்தார்.

அரச சட்டவாதியின் விளக்கம்:

என்னினும் இதன்போது மன்றில் ஆஜ்ராகிய அரச சட்டவாதி ,
‘  நாட்டில் நிலவும் சூழலில் எந்த பிரதிவாதியும் எந்த நீதிமன்றங்களுக்கும் அழைக்கப்படாத பின்னணியில், இவ்வழக்கின் பிரதிவாதிக்கு விஷேட  முறைமை சாத்தியமற்றது என  வாதிட்டார்.  சுகாதர சேவைகள் பணிப்பாளரினால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டல்களுக்கு அமையவே நீதிமன்றங்களுக்கு பிரதிவாதிகள் அழைக்கப்படுவதில்லை எனவும், எனவே இது சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் தீர்மானிக்கப்பட வேண்டிய விடயம் என அவர் குறிப்பிட்டார்.

ஒருவரின் சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் அதிகாரம் சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு இல்லை

 எனினும் இதற்கு பதிலளித்த சிரேஷ்ட சட்டத்தரணி சமிந்த அத்துகோரள,
‘ இவ்வழக்கில் எந்த விஷேட நடவடிக்கைகளும் இடம்பெறவில்லை. சாதாரண  வழக்கு விசாரணை முறைமையின் கீழேயே நடக்கிறது.
குற்றவியல் சட்டக் கோவையை மீறி இங்கு எந்த வழக்கு விசாரணைகளும் நடாத்த முடியாது. தற்போது மேன் முறையீட்டு நீதிமன்றங்களில் கூட ஸ்கைப் தொழில் நுட்பம் ஊடாக மேன் முறையீட்டு வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன.
நாட்டில் நிலவும் நிலைமையை மையப்படுத்தி,  ஒருவரின் சுதந்திரத்தை கட்டுப்படுத்தி வைக்கும் அதிகாரம் சுகாதார சேவைகள் பணிப்பாளரின் கையில் இல்லை. சந்தேக நபரை மன்றுக்கு அழைத்து குற்றப் பத்திரிகையை கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.’ என வாதிட்டார்.

நீதிமன்ற அதிகாரம் சுகாதார சேவைக்ள் பணிப்பாளரிடம் இல்லை:

இரு தரப்பு விடயங்களையும் ஆராய்ந்த நீதிபதி குமாரி அபேரத்ன,  முதலில் நீதிமன்ற அதிகாரம் சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு இல்லை என்பதை முதலில் தெளிவுபடுத்திய நிலையில், நாட்டில் நிலவும் சூழலில் பிரதிவாதியை நீதிமன்றுக்கு அழைக்க உரிய சுகாதார பரிந்துரைகள் இருப்பின் அவற்றை மன்றுக்கு அறிக்கையாக சமர்ப்பிக்க சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு உத்தரவிட்டார். அத்துடன் பிரதிவாதிகளை மன்றில் ஆஜர் செய்யவுள்ள வாய்ப்புக்கள் தொடர்பில் மன்றுக்கு விஷேட அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீர்கொழும்பு சிறைச்சாலையின் சிறைச்சாலை அத்தியட்சருக்கும் நீதிபதி கட்டளை பிறப்பித்து வழக்கை எதிர்வரும் ஜூலை 2 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.
Previous articleஎதனையும் மறைக்கவில்லை; அறிவித்தல் விடுக்கப்பட்டமை சட்ட விரோதம்; எக்ஸ்பிரஸ் பேர்ள் சார்பில் மன்றில் ஆஜராகிய சட்டத்தரணிகள் விளக்கம்; விசாரணைகளின் புதிய தகவல்களை முன் வைத்துள்ள சி.ஐ.டி.
Next articleஉரிமைகள் மீறப்படுகின்றமைக்கு எதிராக 54 அமைப்புக்கள் 72 செயற்பாட்டாளர்கள் கைகோர்ப்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here