இலங்கையில் மின் இணைப்புகளை வழங்குவதற்காகப் பயன்படுத்தப்படும் கம்பிகளில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள காரணத்தால், புதிய மின் இணைப்புகளை வழங்குவது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
கம்பிகள் இல்லாத காரணத்தினால் புதிய மின் இணைப்புகளை வழங்க முடியாத நிலை காணப்படுவதாக இணைப்புக்களைப் பெற்றுக்கொள்ள மின்சார சபைக்குச் சென்ற பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா உட்பட சில பிரதேசங்களில் இவ்வாறான பிரச்சினைகள் பதிவாகியுள்ளதோடு, கம்பிகள் கிடைத்த பின்னர் மின் இணைப்புக்களுக்காகப் பணம் செலுத்துமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய மின் இணைப்புகளைப் பெற்றுக்கொள்ள ஏற்கனவே பணம் செலுத்திய மக்களுக்கும் இணைப்புகள் வழங்கப்படாத நிலை தொடர்கின்றது.
இணைப்புக் கம்பிகள் கிடைத்ததும் மின் இணைப்பு வழங்கப்படும் என்று பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தவிடம் வினவியபோது,
‘கம்பிகளின் தட்டுப்பாடு சில பிரதேசங்களில் பதிவாகியுள்ளன. எனினும், அந்த நிலைமைக்கான தீர்வுகள் தற்போதளவில் வழங்கப்பட்டுள்ளன. அதுதவிர வேறு எந்தப் பிரச்சினையும் இல்லை.’ என்றார்.