‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்பதற்கான 13 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணியொன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அமைக்கப்பட்டுள்ளது.
அந்த செயலணியின் தலைவராக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் நியமிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியினால் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய இந்த ஜனாதிபதி செயலணி குறித்தும் அதன் சட்ட திட்டங்கள் தொடர்பிலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சட்டத்துறை பொறுப்பாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ருஷ்தி ஹபீப் அவர்களிடம் வினவியபோது,
கேள்வி: தற்போது நியமிக்கப்பட்டுள்ள ‘ஒரே நாடு ஒரே சட்டம்” என்ற ஜனாதிபதி செயலணி எந்த சட்டத்தின் அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளது?
பதில்: ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற இந்த ஜனாதிபதி செயலணியானது ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவுக்கு இருக்கின்ற சட்டப்பூர்வ அதிகாரத்தின் கீழ் அதாவது அரசியலமைப்பின் 33ஆவது உறுப்புரிமையின் பிரகாரம் இந்த செயலணியை நியமித்துள்ளார்.
இதில் 13 உறுப்பினர்களை உள்ளடக்கி நியமிக்கப்பட்டுள்ளதுடன் இந்த செயலணியின் ஊடாக ஜனாதிபதி இரண்டு விடயங்களை எதிர்ப்பார்க்கின்றார்.
அதாவது முதலாவதாக ஒரு ஆணைக்குழு அல்லது செயலணியை நியமித்ததன் ஊடாக ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற கொள்கை என்ன என்பதை அடையாளம் கண்டு அதனை ஆவணப்படுத்தி அதற்கான ஒரு சட்ட வரைபை கையளிப்பதைத்தான் ஜனாதிபதி எதிர்ப்பார்க்கும் முதலாவது விடயமாகும்.
இரண்டாவது குறித்த சட்டவரைபுக்கு அமைவாக நடைமுறைப்படுத்தப்படுத்த வேண்டிய செயற்பாடுகள் என்ன என்பதை இரண்டாவது கட்டமாக எதிர்ப்பார்க்கப்படும் விடயங்களாகும்.
அதன் பிரகாரம் இந்தக்குழு இதுவரை நீதி அமைச்சால் மேற்கொண்டிருக்கின்ற சட்ட சீர்த்திருத்தங்கள் அதாவது ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற விடயத்தில் இருக்கின்ற சட்டங்களில் அவர்கள் செய்திருக்கின்ற சீர்திருத்தங்கள் தொடர்பாக கண்காணித்து அதிலுள்ள நிறைகள், குறைபாடுகளை அமைச்சுக்கு சமர்ப்பித்து அது தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிக்கையிடுவது தான் இந்த வர்த்தமானி பத்திரத்தின் ஊடாக இந்த செயலணிக்கு வழிகாட்டப்பட்டுள்ள முக்கிய பொறுப்பாகும்.
கேள்வி: இந்த செயலணியின் ஊடாக செயற்படுத்தப்படும் நடைமுறைகள், வேலைத்திட்டங்கள் என்ன?
பதில்: வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை பார்த்தோமானால் இரண்டு விடயங்கள் தொடர்பாக இந்த செயலணிக்கு ஆணையிடப்பட்டுள்ளது.
ஒன்று இலங்கைக்குள் இருக்கின்ற சட்டங்களை அதாவது ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற விடயத்திற்கு முரணாக இருக்கின்ற விடயங்களை அடையாளம் கண்டு அவற்றை சீர்திருத்தம் செய்வதற்காக ஒரு வரைவை ஜனாதிபதிக்கு கையளிக்க வேண்டும்.
இரண்டாவது நீதி அமைச்சு ஏற்கனவே ஒரே நாடு ஒரே சட்டம் தொடர்பான விடயத்தில் செயற்படுத்தியுள்ள விடயங்கள் அதேபோல சட்ட வரைவுகள் சட்ட மறுசீரமைப்புக்கள் தொடர்பாக அதன் தோதான தன்மை பற்றியும் ஏற்புடைமை பற்றியும் ஆராய்ந்து அது சம்பந்தமாகவும் ஒரு அறிக்கையை ஜனாதிபதிக்கு கையளிக்க வேண்டும்.
அதேபோல ஒரேநாடு ஓரே சட்டம் என்ற விடயத்தில் நடைமுறையில் செயற்படுத்தக்கூடிய விடயங்களை ஜனாதிபதிக்கு மேலதிகமாக, குறிப்பிட்ட காலத்திற்குள் கையளிப்பதற்கு இந்த வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக ஜனாதிபதி இவர்களுக்கு ஆணை வெளியிட்டுள்ளார்.
கேள்வி: நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட கலகொடஅத்தே ஞானசார தேரரின் குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, ஆறு வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஒரு தேரர் இந்த செயலணிக்கு தலைவராக்க முடியுமா? சட்டத்தில் இடமுள்ளதா?
பதில்: உண்மையில் இந்த மாதிரியான ஜனாதிபதி செயலணிகளுக்கு தகைமைகள் என்ன? என்பது தொடர்பில் எந்தவொரு சட்டத்திலும் உள்ளடக்கப்படவில்லை.
அதாவது ஏற்கனவே நீதிமன்றத்தால் தண்டனைக்குட்படுத்தப்பட்ட ஒருவர் கடந்த காலங்களில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு பொதுமன்னிப்பில் விடுதலைப்பெற்ற ஒருவர் இந்த மாதிரியான செயலணியில் அங்கத்துவம் வகிக்கலாமா அல்லது தலைமைத்துவம் வகிக்கலமா? வகிக்கக்கூடாதென்பதற்கும் அவர்களுக்கு தகைமை இழப்பு செய்வதற்கு எந்தவொரு சட்டத்திலும் ஏற்பாடுகள் இல்லை.
ஆகவே என்னைப் பொறுத்தவரையில் ஜனாதிபதி இவ்வாறான செயலணிக்கு தலைவர் ஒருவரை நியமித்தமையானது, சட்டப்பூர்வ தன்மை கேள்விக்குட்பவதை விட இதில் ஒரு தரர்மீக பொறுப்பை மீறியிருப்பதாகவே பரவலாக உள்ளது.
கேள்வி: இந்த செயலணியில் பெண்கள் உள்ளீர்க்காதது தொடர்பான கருத்து என்ன?
பதில்: ஆம் கண்டிப்பாக இவ்வாறான தேசிய மட்டத்தில் உருவாக்கப்படும் செயலணிகளில் சகலரையும் உள்வாங்குகின்ற பால்நிலை சமத்துவம் பேணுகின்ற அதேபோன்று வெவ்வேறு சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற புத்திஜீவிகள் உள்வாங்கப்படுவது மிகவும் தேவையான ஒரு விடயமாகும்.
இதில் பெண்கள் யாரும் உள்வாங்கப்படவில்லை என்பதோடு தமிழ், கிறிஸ்வர்கள் எவரையும் நியமிக்கவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும்.
கேள்வி: இந்த ஒரே நாடு ஒரே சட்டத்தின் ஊடாக எதிர்காலத்தில் சிறுபான்மையினருக்கான சாதக பாதக விடயங்கள் ஏதும் உள்ளனவா?
பதில்: வெளிப்படையான கூறவேண்டுமானால் குறிப்பாக தேர்தல் காலங்களில் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்பதில் முக்கியமாக முஸ்லிம் தனியார் சட்டம் அதாவது இந்த நாட்டில் சமூகம் சார்ந்த மிக முக்கியமான விடயம் தான் முஸ்லிம் தனியார் சட்டம்.
இந்த முஸ்லிம் தனியார் சட்டத்தை நீக்குவதற்கான முஸ்தீபுகளில் ஒன்றுதான் இந்த ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ உண்மையில் ஒரே நாடு ஒரே சட்டம் எதுவாக இருக்க வேண்டும் என்றால், இருக்கின்ற புதிய சட்டங்களை பொதுவாகவும் சமத்துவமாகவும் நிரூபிக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.
குறிப்பாக பலம் வாய்ந்தவர்களுக்கு சட்டத்தை செயற்படுத்தாமலிருப்பது பலமற்ற ஒருவருக்கு சட்டத்தை செயற்படுத்துவது அதிகாரமற்ற ஒருவருக்கு சட்டத்தை செயற்படுத்துவது அரசாங்கத்தில் மிக நெருக்கமான ஒருவருக்கு சட்டம் செயற்படாமலிருப்பது சாதாரண மக்களுக்கு மட்டும் சட்டம் செயற்படுவது போன்ற விடயங்களுக்குத்தான் நாங்கள் சொல்வது சட்டங்கள் அனைவருக்கும் சமமாக பயன்பெற வேண்டும் என்று.
ஆனால் குறிப்பாக முஸ்லிம்களின் தனியார் சட்டத்தை இலக்கு வைப்பதற்குத் தான் இந்த ஒரேநாடு ஒரே சட்டம் என்ற அரசியல் கோசம் உருவெடுத்து அது ஒரு தேர்தல் வாக்குறுதியாக வந்து அதனை தற்போது சட்டப்பூர்வமாக்கிக் கொள்வதற்காகத்தான்.