கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை வெள்ளை வேனில் கடத்திச் சென்று கப்பம் பெற்றுக்கொண்டு காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பில், முன்னாள் கடற்படை தளபதி அத்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொடவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றப் பகிர்வு பத்திரத்தை வாபஸ் பெற, சட்ட மா அதிபர் எடுத்த தீர்மானமானது மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் ஒருவர் வழங்கிய இரகசிய அறிக்கை ஒன்றினை மையப்படுத்தி எடுக்கப்பட்ட முடிவாகும் தெரியவந்துள்ளது. நேற்று ( நவ.01) மேன் முறையீட்டு நீதிமன்றுக்கு இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரிட் மனு :
வசந்த கரன்னாகொடவுக்கு எதிரான குற்றப் பகிர்வு பத்திரத்தை வாபஸ் பெற சட்ட மா அதிபர் எடுத்துள்ள தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனு மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான சோபித்த ராஜகருணா மற்றும் தம்மிக கனேபொல ஆகியோர் முன்னிலியில் பரிசீலனைக்கு வந்த போதே இந்த விடயம் தெரியவந்தது.
அரசியலமைப்பின் 140 ஆவது அத்தியாயத்துக்கு அமைய தாக்கல் செய்யப்பட்டுள்ள இது குறித்த எழுத்தானை நீதிப் பேராணை மனுவை விசாரணைக்கு ஏற்பதா இல்லையா என்பது குறித்த உத்தரவுக்காக நேற்று இம்மனு பரிசீலனைக்கு வந்திருந்தது.
மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் நரின் புள்ளே :
இதன்போது மனுவில் ஒரு பிரதிவாதியான சட்ட மா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் நரின் புள்ளே, குற்றப் பத்திரிகியை வாபஸ் பெறும் தீர்மானமானது, மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஒருவர் அளித்த அறிக்கை ஒன்றினை மையப்படுத்தி சட்ட மா அதிபரால் எடுக்கப்பட்ட தீர்மானமாகும். அந்த அறிக்கை இரகசிய அறிக்கையாகும்.’ என தெரிவித்தார்.
இதனையடுத்து, இந்த மனுவை விசாரணைக்கு ஏற்பதா இல்லையா என தீர்மானிக்க முன்னர், அந்த இரகசிய அறிக்கையை மன்றில் சமர்ப்பிக்குமாறு மேன் முறையீட்டு நீதிமன்றம் சட்ட மா அதிபருக்கு உத்தரவிட்டது. அதன்படி இன்று ( நவ.2) அந்த அறிக்கையை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்டு மனு மீதான பரிசீலனைகளை அதுவரை ஒத்தி வைத்தது.
எழுத்து மூல சமர்ப்பணம் :
அத்துடன் இந்த ரிட் மனு தொடர்பிலான எழுத்து மூல சமர்ப்பணங்களை நாளை 3 ஆம் திகதிக்கு முன்னர் மன்றில் சமர்ப்பிக்குமாறும் நீதிமன்றம் இரு தரப்பினருக்கும் உத்தரவிட்டது.
சட்டத்தரணிகளின் பிரசன்னம் :
மனு பரிசீலனைக்கு வந்த போது, மனுதாரர் சார்பில் சட்டத்தரணி அச்சலா செனவிரத்னவின் ஆலோசனை பிரகாரம் சட்டத்தரணி நுவன் போப்பகே மன்றில் ஆஜரானார்.
பிரதிவாதிகளில் வசந்த கரன்னாகொடவுக்காக ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வாவும், சட்ட மா அதிபருக்காக மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் நரின் புள்ளேவும் மன்றில் ஆஜராகினர்.
ரிட் மனுதாரர்கள் :
கொழும்பில் வைத்து கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட 5 மாணவர்களின் பெற்றோரான, கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த சரோஜா கோவிந்தசாமி நாகநாதன், மருதானையைச் சேர்ந்த ஜமால்தீன் ஜெனி பஸ்லீன் ஜெனீபர் வீரசிங்க, டொன் மேர்வின் பிரேமலால் வீரசிங்க, தெமட்டகொடவைச் சேர்ந்த அமீனதுல் ஜிப்ரியா சப்ரீன் ஆகியோர் இந்த ரிட் மனுவை தாக்கல் செய்தனர்.
சி.ஏ. ரிட் 424/21 எனும் இலக்கத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த ரிட் மனுவில், பிரதிவாதிகளாக சட்ட மா அதிபர் மற்றும் முன்னாள் கடற்படை தளபதி அத்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொட ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
சட்டத்தரணி நுவன் போப்பகேயின் வாதம் :
முன்னாள் கடற்படைத் தளபதிக்கு எதிரான குற்றப்பத்திரிகைகளை வாபஸ் பெறுவதற்கான தீர்மானமானது நியாயமற்ற, பாரபட்சமான, சட்டவிரோதமான, சட்டத்திற்குப் புறம்பான மற்றும் தேவையற்ற நன்மைகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கத்துடன் இயற்கை நீதி கோட்பாடுகளுக்கு எதிரான அரசியல் உள்நோக்கம் கொண்ட தீர்மானம் என மனுதாரர்கள் சார்பில் கடந்த தவணையின் போது சட்டத்தரணி நுவன் போப்பகே வாதிட்டிருந்தார்.
ராஜீவ் நாகநாதன், விஸ்வநாதன் பிரதீப், மொஹமட் டிலான், மொஹமட் சாஜித் உள்ளிட்ட 5 பேர் 2008 செப்டெம்பர் 17 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த நாட்களில் காணாமல் போயுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மற்றுமொரு குற்றச் செயல் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, இவ்வாறு காணாமல் போனவர்களுக்கும் முன்னாள் கடற்படைத் தளபதி உள்ளிட்ட சில கடற்படையினருக்கும் நேரடித் தொடர்பு இருப்பது தெரியவந்ததாக மனுதாரர்கள் சார்பில் நுவன் போப்பகே குறிப்பிட்டிருந்தார்.
பிட்டு பம்பு மற்றும் கன்சைட் :
குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தின் விசாரணைகளின் படி, மேற்படி பாதிக்கப்பட்டவர்கள் உட்பட சிலர் கடத்தப்பட்டு, கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் அமைந்துள்ள “பிட்டு பம்பு” என்ற அறையில் சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்தமையும் பின்னர் அவர்கள் முன்னாள் கடற்படைத் தளபதியின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்த திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் விஞ்ஞான பீட வளாகத்தில் அமைந்துள்ள கன்சைட் என்ற சட்டவிரோத நிலத்தடி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமையும் விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டிருந்ததாக மனுதாரர்கள் மன்றில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
முன்னாள் கடற்படைத் தளபதியின் மீதான குற்றப்பத்திரிக்கையை வாபஸ் பெறுவதற்கான சட்டமா அதிபரின் தீர்மானமானது சட்டத்தினால் வழங்கப்பட்ட விருப்புரிமை அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்வதாகவும், எனவே நீதி நிர்வாகத்தின் நோக்கத்திற்காக இந்த நீதிமன்றத்தின் உத்தரவின் அந்த தீர்மானம் திருத்தப்பட வேண்டியதெனவும் மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணி நுவன் போப்பகே குறிப்பிட்டிருந்தார்.