இளம் கவிஞர் அஹ்னாப் விளக்கமறியலில்; யாருக்கும் அறிவிக்காது நீதிமன்ன்றுக்கு அழைத்து சென்று சி.ரி.ஐ.டி. இரகசிய நடவடிக்கை

நவரசம என்ற கவிதைத் தொகுப்பு புத்தகத்தை எழுதியமைக்காக  கைது செய்யப்பட்டுள்ள அஹ்னாப் ஜஸீம் எனும் இளம் கவிஞர், சி.ரி.ஐ.டி. எனப்படும் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவில் நீண்டகாலம்  தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், இரகசியமாக கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 11 ஆம் திகதி வெள்ளியன்று, அஹ்னாப் ஜெஸீம், தங்காலை தடுப்பு நிலையத்திலிருந்து கொழும்புக்கு அழைத்து வரப்பட்டு, மறு நாள் சனிக் கிழமை கொழும்பு 8 ஆம் இலக்க நீதிவான் நீதிமன்றில், 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடை சட்டத்தின் 7 (2) ஆம் அத்தியாயம் பிரகாரம் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். இதனையடுத்து அவர் எதிர்வரும் 22 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அஹ்னாப் ஜஸீமை நீதிமன்றில் ஆஜர் செய்வதாக பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவு அவரது சட்டத்தரணிக்கோ அல்லது குடும்பத்தாருக்கோ கூட அறிவிக்கவில்லை எனவும்,  ஜனநாயகத்துக்கு மிக விரோதமாக இரகசியமான முறையில்  பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினர் இதனை முன்னெடுத்துள்ளதாகவும், அஹ்னாப் ஜஸீமின் சட்டத்தரணி சஞ்சய  தெரிவித்தார்.
 அஹ்னாப் ஜஸீமின் குடும்பத்தார்  கடந்த சனிக் கிழமை அவருடன் பேசுவதற்காக பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினருக்கு தொலைபேசியில் அழைத்துள்ள போதும், அப்போது கூட ஒவ்வொரு நேரத்தை கூறி பிறகு அழைக்குமாறு தெரிவித்துள்ளதுடன், நீதிமன்றில் ஆஜர் செய்யப்படுவதை அவர்கள் மறைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந் நிலையில் எதிர்வரும் 22 ஆம் திகதி மன்றில் விஷேட வாதங்களை முன் வைக்க எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஏற்கனவே அஹ்னாப் ஜஸீமின் கைதும் தடுப்புக் காவலும் சட்ட விரோதமானது எனக் கூறி உயர் நீதிமன்றில் எஸ்.சி.எப்.ஆர். 114/ 2021 எனும் இலக்கத்தின் கீழ் அடிப்படை உரிமை மீறல் மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ள பின்னணியிலும்,  சர்வதேசத்தின் கரிசணை இவ்விவகாரத்தில் குவிந்துள்ள பின்னணியிலுமே மிக இரகசியமாக அஹ்னாப் ஜஸீம் மன்றில் ஆஜர் செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
26 வயதான கவிஞர் அஹ்னாப், கவிஞராகவும் ஆசிரியராகவும் செயற்பட்டு வந்ததுடன் அவர், பேருவளை ஜாமியா நளீமியா கலாபீடத்தில் தனது கல்வியை நிறைவு செய்தவராவார்.
இந் நிலையில் கடந்த 2020 மே 16 அம் திகதி இரவு 8 மணியளவில்,  சிலாவத்துறை , பண்டாரவெளியில் அமைந்துள்ள அவரது  வீட்டில் வைத்து சி.ரி.ஐ.டி.  வவுனியா கிளை பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர்  கே.கே.ஜே. அனுரசாந்தவினால் அஹ்னாப் ஜஸீம்  கைது செய்யப்பட்டிருந்தார்.
இதன்போது அவரது வீட்டிலிருந்து 50 இற்கும் அதிகமான நவரசம் கவிதை தொகுப்பு புத்தகங்க்ளும் மேலும் சில புத்தகங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டிருந்தன.
முதலில் கோட்டை நீதிமன்றில் உள்ள பீ 13101/19 வழக்கு தொடர்பில் அஹ்னாப் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டாலும்,  கடந்த மார்ச் 3 ஆம் திகதி பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் கோட்டை நீதிமன்றின் குறித்த வழக்கில் அஹ்னாப் சந்தேகநபரில்லை என நீதிமன்றில் அறிவித்திருந்தார்.
எனினும் அவருக்கு எதிராக புதுக் கடை நீதிவான் நீதிமன்றில் உள்ள வழக்கொன்று தொடர்பில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் விசாரணை செய்வதாக பிரசாந்த ரத்னாயக்க எனும் ரி.ஐ.டி.யின் உப பொலிஸ் பரிசோதகர் ஊடாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அத்துடன் கைது செய்யப்படும் போது கூறப்பட்ட காரணத்தை விட, தற்போது, பேருவளை ஜாமியா நளீமியா கலாபீடிடத்தில்  அடிப்படைவாதம் போதனை செய்யப்பட்டதாக ஒப்புதல் வாக்கு மூலம் ஒன்றினை வழங்குமாறு பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் அஹ்னாபை சித்திரவதை செய்வதாக அவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொழும்பு நீதிவான் நீதிமன்றில் உள்ள பீ 44230/8/20 எனும் வழக்கிலேயே தனக்கு எதிரகவே ஒப்புதல் வாக்கு மூலம் வழங்க அஹ்னாப் இவ்வறு  கட்டாயப்படுத்தபப்டுவதாகவும்  அம்மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறான பின்னணியிலேயே தடுப்புக் காவலில் இருந்த அஹ்னாப் மிக இரகசியமாக நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
Previous articleஉரிமைகள் மீறப்படுகின்றமைக்கு எதிராக 54 அமைப்புக்கள் 72 செயற்பாட்டாளர்கள் கைகோர்ப்பு
Next articleபிணை தீர்மானம் நாளை; ஒரு வாக்கு மூலத்துக்காக விளக்கமறியலில் வைப்பது நியாயமற்றது : ஷானியின் சட்டத்தரணிகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here