“மொனராகலை ஊடகவியலாளரைத் தாக்கியவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கையெடுக்கப்பட வேண்டும்”

கும்புகன் ஓயாவில் சட்டவிரோதமாக மணல் அகழ்வு செய்த சம்பவத்தை அறிக்கையடச் சென்ற மொனராகலை தெரண தொலைக்காட்சி ஊடகவியலாளர் இந்துனில் விஜேநாயக்க மீது நடந்த குண்டர் தாக்குதலை சுதந்திர ஊடக இயக்கம் வன்மையாகக்  கண்டித்துள்ளது.

சுதந்திர ஊடக இயக்கம் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“எமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, கும்புகன் ஓயா பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வு சம்பவம் குறித்து அறிக்கையிடுவதற்காக ஊடகவியலாளர் இந்துனில் விஜேநாயக்க சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார். அந்த நேரத்தில் அவரது அறிக்கையிடலுக்கு குருக்கீடு செய்த ஒரு குழு அவரைத் தாக்கியுள்ளது. இதன் காரணமாக அவர் மொனராகல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக மொனராகலை போலீசில் புகார் அளிக்கப்பட்ட்டதைத் தொடர்ந்து,  விசாரணையை ஆரம்பித்த போலீசார் சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளனர் என்று அறியவருகின்றது.

சமீப காலங்களில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோத மணல் அகழ்வு குறித்து ஊடகவியலாளர்கள் அறிக்கை இட்டுள்ளனர்; இந்த அறிக்கைகள் தமது விசாரணைகளுக்கு பெரும் உதவியாக இருந்தன என்று இலங்கை காவல்துறை செய்தித் தொடர்பாளர் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் இருந்து ஊடகவியலாளர்களின் பங்கின் முக்கியத்துவம் ஒப்புக் கொள்ளப்படுகிறது. உள்நாட்டு சுற்றுச்சூழல் விதிமுறைகள் மற்றும் சர்வதேச உடன்படிக்கைகள் அடிப்படையில் நாட்டின் அரிய இயற்கை வளங்களை பாதுகாக்கும் பொறுப்பு இலங்கை அரசுக்கு உள்ளது.

இத்தகைய பின்னணியில், சுற்றுச்சூழல் தகவல்களை அறிக்கையிடும் ஊடகவியலாளர்கள் முந்தைய பல சந்தர்ப்பங்களில் சுற்றுச்சூழல் குற்றங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபர்களால் துன்புறுத்தப்பட்டுள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பாக சட்டம் முறையாக அமுல்படுத்தப்பட்டிருந்தால், ஊடகவியலாளர்கள் அடிக்கடி சுற்றுச்சூழல் குற்றவாளிகளின் தாக்குதல்களுக்கு ஆளாக வேண்டியதில்லை. எனவே, இந்த சம்பவம் குறித்து உடனடியாக ஒரு பக்கச்சார்பற்ற விசாரணையை நடத்தி, சந்தேக நபர்களின் அந்தஸ்த்தைப் பொருட்படுத்தாமல் சட்டத்தை அமல்படுத்துமாறு சுதந்திர ஊடக இயக்கம் அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறது.”

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here