அசாத் சாலிக்கு எதிராக மேல் நீதிமன்றில் வழக்கு; பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஒருவருக்கு எதிராக மூன்று மாதங்களுக்குள் தாக்கல் செய்யப்பட்ட முதல் குற்றப் பத்திரிகை

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலிக்கு எதிராக  கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடை சட்டம் மற்றும் 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க சிவில், அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டம் ஆகியவற்றின் கீழ்  சட்ட மா அதிபர் சஞ்ஜய் குமார்  ராஜரத்னம் இது குறித்த குற்றப் பகிர்வுப் பத்திரிகையை கடந்த வெள்ளியன்று(25) தாக்கல் செய்துள்ளார். ஊடக சந்திப்பொன்றில் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அரசின் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் நேற்று (28) உயர் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளார்.

அடிப்படை உரிமை மீறல் மனு பரிசீலனை:

அசாத் சாலி சார்பில், தன்னையே மனுதாரராக பெயரிட்டு, சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசா தாக்கல் செய்துள்ள  அடிப்படை உரிமை மீறல் மனு நேற்று உயர் நீதிமன்றில் பரிசீலனைக்கு  வந்தது.
உயர் நீதிமன்ற நீதியரசர்களான பிரியந்த ஜயவர்தன, யசந்த கோதாகொட மற்றும் ஏ.எச்.எம்.டி. நவாஸ் ஆகியோர் முன்னிலையில் அது இவ்வாறு  பரிசீலிக்கப்பட்டது.
இதன்போது மனுதாரர்  சார்பில் சிரேஷ்ட  சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசாவின் ஆலோசனைக்கு அமைய, ஜனாதிபதி சட்டத்தரணிகளான பாயிஸ் முஸ்தபா, மைத்திரி குணரத்ன மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணி என்.எம். சஹீத் உள்ளிட்ட குழுவினர் ஆஜராகினர்.
பிரதிவாதிகளுக்காக அரசின் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் பிரசன்னமானார்.

விசாரணை நடாத்தப்படும் இரு விடயங்கள் :

இதன்போது மன்றில் விடயங்களை முன் வைத்த பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ்,
‘  அசாத் சாலி பிரதானமாக இரு விடயங்களை மையப்படுத்தி கடந்த 2021 மார்ச் 16 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார். ஒன்று கடந்த 2021 மார்ச் 9 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த நாளொன்றில், இன, மத குழுக்களிடையே முரண்பாடுகளை ஏற்படுத்தும் விதமாக ஊடக சந்திப்பொன்றினை நடாத்தி வெளியிட்ட கருத்துக்களை மையப்படுத்தியதாகும். மற்றையது  மாவனெல்லை புத்தர் சிலை தகர்ப்பு விவகார சந்தேக நபர்களுக்கு உதவியளித்தமை தொடர்பிலான விவகார விசாரணையாகும். இந்த விசாரணைகள் தொடர்கின்றன.

குற்றப் பத்திரிகை:

எனினும் ஊடக சந்திப்பில் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் கடந்த வெள்ளியன்று  கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை  தாக்கல் செய்யப்பட்டுள்ளது.’ என தெரிவித்தார்.
இதன்போது மனுதாரர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசாவின் ஆலோசனையின் பேரில் வாதங்களை முன் வைத்த ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா, அவ்வாறெனில் அடிப்படை உரிமை மீறல் மனுவினை விசாரணைக்கு ஏற்று திகதி குறிக்குமாறு கோரினார்.  அதனை உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

மன்றில் ஆஜர் செய்ய தயார்:
இதன்போது மனுவில், பாதுகாப்பு அமைச்சரின் தடுப்புக் காவல் உத்தரவு சட்டவலுவற்றதென தீர்ப்பறிவிக்குமாறும் இடை க்கால தடை உத்தரவு வழங்கி கைதியான அசாத் சாலியை  நீதிமன்றில் ஆஜர் செய்ய  உத்தரவிட வேண்டும் எனும் கோரிக்கை தொடர்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ்  வாதங்களை முன் வைத்தார்.
‘ தற்போதும்  அசாத் சால்லி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெறும் நிலையில், அவரை மன்றில் ஆஜர் செய்ய முடியும் என மருத்துவர்கள்  சான்றிதழ் வழங்கும் பட்சத்தில் மன்றில் ஆஜர் செய்ய தயார்’ என  திலீப பீரிஸ் தெரிவித்தார்.
இதன்போது  மன்றில் பேசிய ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா, பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் அது தொடர்பில் உறுதிப்பாட்டை மன்றுக்கு தெரிவித்துள்ள நிலையில், இடைக்கால தடை உத்தரவு அவசியமற்றது என குறிப்பிட்டார்.

ஜூலை 29 ஆம் திகதி விசாரணை:

இந் நிலையிலேயே இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைகளுக்காக எதிர்வரும் ஜூலை 29 ஆம் திகதி  எடுத்துக்கொள்வதாக உயர் நீதிமன்றம் அறிவித்தது. அத்துடன் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப் பகிர்வுப் பத்திரத்தின் பிரதிகளை உயர் நீதிமன்றுக்கும், மனுதாரரின் சட்டத்தரணிக்கும் கையளிக்குமாறு உயர் நீதிமன்றம் பிரதி சொலிசிட்டர் ஜெனரலுக்கு அறிவித்தது.

கைது மற்றும் தடுத்து வைப்புக்கு எதிராக உயர் நீதிமன்றில் கடந்த ஏப்ரல் 5 ஆம் திகதி அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று அசாத் சாலி சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  அசாத் சாலி சார்பில், தன்னையே மனுதாரராக பெயரிட்டு, சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசா இம்மனுவை தாக்கல் செய்திருந்தார்.
சட்ட மா அதிபர், பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன, சி.ஐ.டி. பணிப்பாளர், சி.ஐ.டி.யின் விஷேட விசாரணைப் பிரிவு இலக்கம் – 1 இன் பொறுப்பதிகாரி  பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜயந்த பயாகல, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர,  குறித்த அமைச்சின் செயலர்  ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரால் ஜகத் அல்விஸ் ஆகியோர் இம்மனுவில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

மேல் நீதிமன்ற வழக்கு:

அசாத் சாலிக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் சட்ட மா அதிபர்  எச்.சி./2778/2021 எனும் இலக்கத்தில் கீழ் வழக்குத் தொடுத்துள்ளார். அதில்  அசாத் சாலிக்கு எதிராக இரு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

குற்றச்சாட்டுக்கள் :

கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் 9 ஆம் திகதி அல்லது அதனை  அண்மித்த நாளொன்றில்,  கொழும்பு மேல் நீதிமன்ற அதிகார எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஊடக சந்திப்பொன்றினை நடாத்தி மத, இன பேதங்களை  தோற்றுவிக்கும், வன்மத்தை தூண்டும் வகையில் கருத்து வெளியிட்டதாக கூறி 1988 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க சட்டம் மற்றும் 1982 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க சட்டங்களால் திருத்தப்பட்ட 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடை சட்டத்தின் 2 (1) ஏ பிரிவுடன் இணைத்து பர்க்க வேண்டிய 2 (2) ( ஈ ) அத்தியாயத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் ஒன்றினை அசாத் சாலி புரிந்துள்ளதாக முதல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

ஐ.சி.சி.பி.ஆர். இன் கீழும் குற்றச்சாட்டு:

அத்துடன் இதே சம்பவம் காரணமாக 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க சிவில், அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் ( ஐ.சி.சி.பி.ஆர்.) 3 (1) ஆம் உறுப்புரையுடன் இணைத்து பர்க்க வேண்டிய 3 (3) ஆம் உறுப்புரையின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் ஒன்றினை அசாத் சாலி புரிந்துள்ளதாக அவர் மீது முன் வைக்கப்பட்டுள்ள இரண்டாவது குற்றச்சாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

56 சாட்சியாளர்கள் :

இக்குற்றச்சாட்டுக்களை நிரூபிப்பதற்காக சட்ட மா அதிபரால் 56 சாட்சியாளர்களின் பெயர் பட்டியல் மேல் நீதிமன்றுக்கு பட்டியலிட்டு கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன்  சான்றுப் பொருட்களாக இறுவெட்டுக்கள், மெமரி சிப் , ஊடக சந்திப்பு பிரதி, கடிதம் ஒன்று ஆகியனவும் சட்ட மா அதிபரால் முன் வைக்கப்பட்டுள்ளன.

குறுகிய காலத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகை :

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஒருவருக்கு, அச்சட்டத்தின் கீழ் மிக குறுகிய காலத்தில் ( 3 மாதங்கள்) மேல் நீதிமன்றில் குற்றப் பகிர்வுப் பத்திரம் தாக்கல் செய்துள்ள முதல் சந்தர்ப்பம் இதுவாகும். சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசா உயர் நீதிமன்றில் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல்  மனு ஊடாக இது சாத்தியப்பட்டுள்ளதுடன், நிர்வாக  தடுப்புக் காவலில் பிரதிவாதி இருக்கும் போதே தாக்கல் செய்யப்பட்ட முதல் குற்றப்பத்திரிகையாகவும் இது கருதப்படுகிறது.

Previous articleஇறுதி முடிவு உங்களுடையது எனில் சட்டம் எதற்கு? அநீதியான  மன்னிப்பளிப்பு குறித்து ஹிருனிகா பிரேமசந்ர ஜனாதிபதிக்கு கடிதம்
Next articleமீண்டும் சட்ட விரோத யானை குட்டி வர்த்தகம்? : ஹபரனையில் வன ஜீவராசிகள் பாதுகாப்பு  அதிகாரி மீது இராணுவ மேஜர் ஜெனரால் தாக்குதல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here