மனித படு கொலை குற்றத்துக்காக இரு நீதிமன்றங்களின் 7 நீதிபதிகள் குற்றவாளியாக கண்டு மரண தண்டனை விதித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆர். துமிந்த சில்வா ஜனாதிபதியின் விஷேட பொது மன்னிப்பின் கீழ் நேற்று ( 24) விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் தொழிற்சங்க ஆலோசகருமான பாரத லக்ஷ்மன் பிரேமசந்ர உள்ளிட்ட நால்வர் படுகொலை தொடர்பில் குற்றவாளியாளியாக காணப்பட்டு துமிந்த சில்வாவுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் வெலிக்கடை சிறையில் ( சிறைச்சாலை வைத்தியசாலையின் விஷேட பிரிவில்)தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இந் நிலையிலேயே நேற்று காலை அவரது விடுதலைக்கான ஜனாதிபதியின் கையொப்பம் அடங்கிய ஆவணம், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்துக்கு கிடைக்கப் பெற்றதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்தார். அதனையடுத்தே அவரை விடுதலை செய்ததாக அவர் கூறினார்.
பொது மன்னிப்பு குறித்த அரசியலமைப்பு விடயம்:
அரசியலமைப்பின் 34 ஆவது உறுப்புரை பிரகாரம் ஜனாதிபதிக்கு, குற்றவாளிகளுக்கு மன்னிப்பளிப்பதற்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அந்த உறுப்புரை பிரகாரம் ஜனாதிபதிக்கு குற்றவாளி ஒருவருக்கு பூரண மன்னிப்பு அளிக்கவும், சட்ட ரீதியிலான நிபந்தனைகளின் அடிப்படையில் மன்னிப்பு வழங்கவும், தண்டனையின் தன்மையை மாற்றவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
எனினும் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவருக்கு மன்னிப்பு வழங்குவதானால், அவ்வழக்கை விசாரித்த நீதிபதிகளின் அறிக்கையினைப் பெற்று, அதனை சட்ட மா அதிபருக்கு அனுப்பி அவரது அலோசனைகளை நீதி அமைச்சர் ஊடாக உறுதி செய்து ஜனாதிபதி பெற்றுக்கொண்ட பின்னரேயே வழங்க முடியும்.
இவ்வாறான பின்னணியிலேயே ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, துமிந்த சில்வாவுக்கு நேற்று பொசன் போயா தினத்தன்று பொது மன்னிப்பளித்துள்ளார். எனினும் இந்த படி முறை இதன்போது பின்பற்றப்பட்டதா என உறுதி செய்ய முடியவில்லை.
ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழு:
கடந்த 2015 ஜனவரி 8 ஆம் திகதி முதல் 2019 நவம்பர் 19 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் இடம்பெற்றதாக கூறப்படும் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில், ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் இறுதி பரிந்துரைகளில் துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு தொடர்பில் மீளாய்வு செய்யப்பட வேண்டும் எனவும், அவருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு அளிப்பது பொருத்தமானது எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கையெழுத்திட்டு ஒரு பிரேரனையை ஜனாதிபதிக்கு கையளித்து துமிந்தவுக்கு பிணையளிக்க கோரியிருந்தனர். இவ்வாறான பின்னணியிலேயே தற்போது அவருக்கு பொது மன்னிப்பளிக்கப்பட்டுள்ளது.
போயா தினத்தன்று விடுவிக்கப்பட்ட கைதிகள்:
நேற்றைய தினம் 16 அரசியல் கைதிகள் உட்பட 93 பேருக்கு பொது மன்னிப்பளிப்பதாகவே சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்துக்கு முதலில் ஆவணங்கள் அனுப்பப்பட்டிருந்தன. இந் நிலையிலேயேயே நேற்று காலை விஷேட மன்னிப்பாக துமிந்த சில்வவாவுக்கு மன்னிப்பளிப்பதற்கான அனுமதி அடங்கிய ஆவணம் அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி நேற்று 94 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
பின்னணி சம்பவம்:
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் தொழிற்சங்க ஆலோசகருமான பாரத லக்ஷ்மன் பிரேமசந்ர உள்ளிட்ட நால்வர் கடந்த 2011 ஒக்டோபர் 8 ஆம் திகதி முல்லேரியா – ஹிம்புட்டான பகுதியில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டனர். மாகாண சபை தேர்தல் நடந்த குறித்த தினத்தில் இடம்பெற்ற இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பரஸ்பர துப்பாக்கிச் சூட்டில் துமிந்த சில்வாவும் படு காயமடைந்திருந்தார்.
பாரத லக்ஷ்மன் பிரேமசந்ர:
பாரத லக்ஷ்மன் பிரேமசந்ர கொலன்னாவை நகர சபை ஊடாக தனது அரசியல் வாழ்வை 1979 இல் ஆரம்பித்திருந்தார். 1983 ஆம் ஆண்டு கொலன்னாவை நகர சபையின் எதிர்க்கட்சித் தலைவராக மாறிய பாரத லக்ஷ்மன் பிரேமசந்ர இலங்கை மக்கள் கட்சியின் ( ஸ்ரீ லங்கா மஹஜன கட்சி) உறுப்புரிமையை பெற்றுக்கொண்டதுடன் அதன் கொலன்னாவை அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டார்.
1988 ஆம் ஆண்டின் இலங்கையின் முதலாவது மாகாண சபை தேர்தலில் போட்டியிட்ட பாரத லக்ஷ்மன் பிரேமசந்ர, மக்கள் கட்சியை பிரதி நிதித்துவம் செய்து ஐக்கிய சோஷலிச கூட்டணி சார்பில் மேல் மாகாண சபை உறுப்பினராக தெரிவானார். அதனை தொடர்ந்து 1993 ஆம் ஆண்டு இடம்பெற்ற மாகாண சபை தேர்தலிலும் போட்டியிட்டு அவர் மாகாண சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.
1994 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்ட பாரத லக்ஷ்மன் பிரேமசந்ர, 63421 விருப்பு வாக்குகளை பெற்று பாராளுமன்றுக்கு தெரிவானார். இதனையடுத்து கடந்த 2000, 2001 ஆம் ஆண்டுகளிலும் 2 ஆவது, மூன்றாவது முறையாகவும் பாராளுமன்றுக்கு தெரிவான பாரத லக்ஷ்மன் பிரேமசந்ரவின் பாராளுமன்ற உறுப்பினரான வாழ்வு கடந்த 2004 ஆம் ஆண்டுடன் நிறைவுக்கு வந்தது.
இதனையடுத்து அவர் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷவின் தொழிற்சங்க ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.
துமிந்த சில்வா:
இவ்வாறான பின்னணியிலேயே பாரத லக்ஷ்மன் பிரேமசந்ரவின் அதிகார பகுதியாக இருந்த கொலன்னாவை பகுதியில் 2010 ஆம் ஆண்டு முதல் துமிந்த சில்வா அதிகாரத்தை கைப்பற்றினார்.
துமிந்த தனது அரசியல் வாழ்வை கடந்த 2004 இல் மேல் மாகாண சபை ஊடாக ஆரம்பித்திருந்தார். 2004 மற்றும் 2009 மாகாண சபை தேர்தல்களில் கொழும்பில் அதிக விருப்பு வாக்குகளை துமிந்த சில்வாவே பெற்றிருந்தார்.
2004 ஆம் ஆண்டு, ஐக்கிய தேசிய கட்சி ஊடாக தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்த துமிந்த சில்வாவுக்கு, மாகாண சபை உறுப்பினராக இருந்த போது சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது. இது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி துமிந்த சில்வாவுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகளை ஆரம்பித்திருந்த பின்னணியில் வேறு காரணிகளையும் மையப்படுத்தி, துமிந்த சில்வா 2007 ஆம் ஆண்டு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கு கட்சி மாறினார்.
இந் நிலையில் பின்னர் சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டு, கடந்த 2010 ஆம் ஆண்டு முன்னாள் சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸினால் வாபஸ் பெறப்பட்டது. 2003 ஆம் ஆண்டளவில் இடம்பெற்றதாக கூறப்பட்ட அந்த துஸ்பிரயோக சம்பவத்தை துமிந்த சில்வாவும் தொடர்ச்சியாக மறுத்து வந்தார்.
இது தொடர்பில் முன்னாள் பிரதம நீதியரசர் அசோக டி சில்வா பி.பி.சி. சிங்கள செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியொன்றில், சாட்சிகள் இருக்கும் பட்சத்தில் முன்னாள் சட்ட மா அதிபர் குறித்த குற்றப்பத்திரிகையை வாபஸ் பெற்றிருந்தால் அது தவறானது என குறிப்பிட்டிருந்தார்.
2010 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி சார்பில் போட்டியிட்டு 146333 விருப்பு வாக்குகளுடன் பாராளுமன்றுக்கு துமிந்த தெரிவாகியிருந்தார்.
துமிந்த சில்வாவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள்:
இதனைவிட துமிந்த சில்வாவுக்கு எதிராக கடந்த 2008 இல் பிரபல நடிகை அனார்கலி ஆகர்ஷா, தனக்கும் தனது தாய்க்கும் அச்சுறுத்தல் விடுத்ததாக முறைப்பாடு செய்திருந்தார். இது தொடர்பில் பின்னர் துமிந்த சில்வா குற்றமற்றவர் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந் நிலையில் துமிந்த சில்வாவுக்கு எதிராக கொலன்னாவை பகுதியில் போதைப் பொருள் வர்த்தகத்தை மையப்படுத்திய குற்றச்சாட்டுக்களும் தொடர்ச்சியாக பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்டிருந்தன.
இவ்வாறான பின்னணியிலேயே கடந்த 2015 ஆம் ஆண்டு விஷேட ஊடகவியலாளர் சந்திப்பினை நடாத்திய பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன பிரபல போதைப் பொருள் வர்த்தகர்களான வெலே சுதா, குடு லாலித்த ஆகியோரிடமிருந்து துமிந்த சில்வா பணம் பெற்றுள்ளதாக அறிவித்த நிலையில் அது குறித்து சி.ஐ.டி. பிரத்தியேக விசாரணைகளை முன்னெடுப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
பாரத லக்ஷ்மன் படுகொலை சம்பவம்:
கடந்த 2011 ஒக்டோபர் 8 ஆம் திகதி முல்லேரியா – ஹிம்புட்டான பகுதியில் வைத்து பாரத லக்ஷ்மன் பிரேமசந்ர சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னர் அதில் காயமடைந்த துமிந்த சில்வா, மருத்துவ சிகிச்சைகளுக்காக 2011 நவம்பர் முதலாம் திகதி சிங்கப்பூருக்கு அனுப்பப்பட்டதுடன், மீண்டும் 2013 ஆம் ஆண்டு மார்ச் 5 ஆம் திகதி எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான ஈ.கே. 349 எனும் விமானத்தில் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார். அவ்வாறு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட துமிந்த சில்வா பின்னர் கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் சேர்க்கப்பட்டார்.
துமிந்தவின் கைது:
எனினும் அன்றைய தினமே குறித்த தனியார் வைத்தியசாலைக்கு சென்ற சி.ஐ.டி. குழு துமிந்த சில்வாவை பாரத லக்ஷ்மன் கொலை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்தது.
2013. மார்ச் 5 ஆம் திகதி முற்பகல் 10.05 மணிக்கு கைதான துமிந்த சில்வாவை கைது செய்ததாக அப்போதைய சி.ஐ.டி. உதவி பொலிஸ் அத்தியட்சரும் பின்னர் பணிப்பாளராக இருந்து தற்போது பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ள சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகர கொழும்பு மேலதிக நீதிவானாக கடமையாற்றியிருந்த சந்துன் விதானவுக்கு அறிவித்திருந்தார். துமிந்த சில்வா கைது செய்யப்பட்ட தயனியார் வைத்தியசாலையிலேயே பொலிஸ் பாதுகாப்பில் இருப்பதாக ஷானி அப்போது நீதிமன்றுக்கு தெரிவித்ததை அடுத்து அங்கு சென்ற நீதிவான் துமிந்தவை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டிருந்தார்.
பிணைப் பெற்றதும் குணமடைந்த துமிந்த: