ஆவணங்கள் எதுவுமின்றி அரச காணிகளை அபிவிருத்தி செய்து அல்லது குடியிருக்கும் மக்களுக்கு சட்ட ரீதியான ஆவணங்கள் வழங்குவதைத் துரிதப்படுத்துவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று (10) வெளியிடப்பட்டுள்ளது.
அரச காணியொன்றில் நிரந்தர வீடமைத்து, விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு அல்லது ஏதாவது அபிவிருத்தி நடவடிக்கையொன்றினை மேற்கொண்டு, உரிமை பாராட்டும் மக்களில் தகுதியானோரைத் தெரிவுசெய்து, சட்ட ரீதியான ஆவணங்களைப் பெற்றுக்கொடுப்பதற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
விசேட அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து மாவட்டங்களில் இருந்தும் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
செழிப்பான பார்வை என்ற அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தின் அடிப்படையில், முதலீட்டு வாய்ப்புகள், விவசாய உற்பத்திக்கு நிலங்களை உகந்த முறையில் நிர்வகித்தல் ஆகிய நோக்கங்களுக்காக, நிலங்களை முறைசாரா விதத்தில் ஆக்கிரமித்துள்ளவர்களை இனங்கண்டு, தகுதிகளின் அடிப்படையில் அவர்களுக்கு சட்ட ரீதியான காணி ஆவணங்கள் வழங்கப்படவுள்ளன.
ஆவணங்கள் எதுவுமின்றி அரச காணிகளில் குடியிருப்போர் சட்ட ரீதியான விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்வதற்கு மாதிரி விண்ணப்பப்படிவத்திற்கு அமைவாக ஒழுங்குமுறையில் விண்ணப்பத்தைப் பூரணப்படுத்தி, காணி அமைந்துள்ள பிரதேச செயலகத்திற்கு அல்லது கிராம அலுவலர், வெளிக்கள அலுவலர்களிடம் கையளிக்கலாம்.
விண்ணப்பப்படிவங்கள் 2020.09.30ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.
தமது விண்ணப்பங்களை பின்வரும் மாதிரி விண்ணப்பங்களுக்கு அமைவாக தயாரித்துக்கொள்ளலாம்.