உலகெங்கிலும் சிவில் உரிமைகள் அழிக்கப்பட்டு, சுயாதீன ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் அடக்குமுறைகளை எதிர்கொண்டு வருவதாக சர்வதேச ஜனநாயக தினத்தை முன்னிட்டு ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் பிரதிநிதிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனநாயக நிறுவனங்கள் மற்றும் நடைமுறைகள் மீதான பொதுமக்கள் நம்பிக்கை வீழ்ச்சியடைந்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சர்வதேச ஜனநாயக தினத்தை (15) முன்னிட்டு ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் பிரதிநிதிகளான துணைத் தலைவர் ஜோசப் பொரெல் மற்றும் துணைத் தலைவர் துப்ராவ்கா சுய்கா ஆகியோர் இணைந்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
‘கொரோனா நோய்த் தொற்று காரணமாகவும் உலக அளவில் ஜனநாயகத்துக்கான சவால்கள் அதிகரித்துள்ளன. சிவில் உரிமைகள் அழிக்கப்பட்டு, சுயாதீன ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் அடக்குமுறைகளை எதிர்கொண்டு வருகின்றனர். ஜனநாயக நிறுவனங்கள் மற்றும் நடைமுறைகள் மீதான பொதுமக்கள் நம்பிக்கையும் வீழ்ச்சியடைந்து வருகின்றது. புதியதோர் அரசியல் பங்கேற்புக்கும் பல சவால்கள் காணப்படுகின்றன.
இவ்வாறான சவால்களுக்கு மத்தியில், ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒத்துழைப்புகளை வழங்கத் தயாராகவுள்ளது. பாலின அல்லது வேறு பின்னணிகளைப் பொருட்படுத்தாமல், ஜனநாயக பங்கேற்பு ஊக்குவிக்கப்பட வேண்டும். ஜனநாயக நடைமுறையின்றி, அமைதி, நிலையான தன்மை, நீண்ட கால அபிவிருத்தி மற்றும் செழிப்பு நிலைத்திருக்காது.’