“இலங்கையை ஒரு சுதந்திர நாடாக காட்ட முயற்சி”

எமது மொழியையும், மதத்தையும் மதிக்காத இன்றைய இலங்கையை ஒரு சுதந்திர நாடாக ஏற்றுக்கொள்ள முடியாது, என கொழும்பு மாவட்ட எம்பியும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் இன்று தெரிவித்துள்ளார். 
இது தொடர்பில் அவரது முகநூல் பக்கத்தில் மேலும்  தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 
“சிங்களத்தில் மட்டுமே தேசிய கீதமாம். இறுமாப்பாக சொல்கிறார்கள். தமிழில் பாடினால் மட்டும் அதனால், தமிழ் பேசும் இலங்கையர் வீடுகளில் தேனும், பாலும் ஓட போவதில்லை. இதன்மூலம் குடி எழும்பியும் விடாது. குடி முழுகியும் விடாது. 
ஆனால், நாட்டை ஒன்றுப்படுத்த கடவுள் தந்த, “ஒரே மெட்டு, ஒரே அர்த்தம்” கொண்ட இரண்டு தேசிய கீதங்களையும் கூட ஒருசேர பாட முடியாத அளவில் இவர்கள் இனவாதத்தில் ஊறி போய் உள்ளார்கள். 
மேலை நாடுகளிலும் இனவாதம், நிறவாதம் இருந்தாலும், வெள்ளை இனவாதிகளுக்கு எதிராக, கருப்பு அமெரிக்கர்களுக்கு ஆதரவாக, “கருப்பு உயிர் கனதியானது” (Black Lives Matter) என்று சொல்லி போராட, கோடிக்கணக்கான வெள்ளையர்களே அந்நாடுகளில் உள்ளார்கள். 
இந்நாட்டில் எமக்கு ஆதரவாக பேச,போராட, நாமே  ஆள் தேட வேண்டியுள்ளது.     
அமெரிக்கா உட்பட்ட மேலை நாடுகளில் இனவாதம் தோலின் நிறத்தில் உள்ளது. இலங்கையில் இங்கே அது ஆன்மாவில் ஊறியுள்ளது. 
முன்னாள் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் என்ற முறையில், நான், ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோரிடம் கடைசி நிமிட அழைப்பாக,
“இலங்கை தாயை போற்றும், தமிழிலான தேசிய கீதத்தையும் பாடி, தேசிய ஒருமைப்பாட்டை கட்டியெழுப்பி, நாம் முன்னோக்கி செல்வோம். அதன்மூலம், நாமும் இந்நாட்டுக்கு உடைமையாளர்கள் என்ற உணர்வை தமிழ் பேசும் சுமார் ஐந்து மில்லியன் இலங்கையர்களின் மனங்களில் ஏற்படுத்துவோம்” என நேற்று கூறியிருந்தேன்.
ஆனால், இவர்களை திருத்த முடியவில்லை. உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் எவ்வளவு அடி வாங்கினாலும், திருந்தா ஜன்மங்கள். பல வர்ண பூக்கள் நிறைந்த பூங்கா எவ்வளவு அழகாக இருக்கும் என்பதை உணர தெரியாத பிற்போக்குவாதிகள். 
உலகமே அவ்வவ் நாடுகளில், பல்லின, பன்மத, பன்மொழி அடங்கிய பன்மைதன்மைகளை கொண்டாடி மகிழும், இவ்வேளையில், இவர்கள் நாட்டை பின்னோக்கி அழைத்து செல்கிறார்கள். 
எங்கள் மொழிக்கும், மதத்துக்கும், இனத்துக்கும், இலங்கை நாட்டுக்குள்ளே கெளரவமான இடம் தராத இன்றைய இலங்கையை ஒரு சுதந்திர நாடாக ஏற்றுக்கொள்ள நாம் தயாரில்லை என இவர்களுக்கு உணர்த்துவோம். 
65 வருடங்களுக்கு பிறகு, கடந்த எமது நல்லாட்சியில், நாம் முன்னின்று போராடி பெற்ற, தமிழ் தேசிய கீதம் பாடும் உரிமையை, இடை நிறுத்தி விட்டு, இவர்கள் கொண்டாடும் சுதந்திர நிகழ்வுக்கு, எமக்கு விடுக்கப்பட்ட அழைப்பை  நாம் ஏற்க மாட்டோம். 
எமது இருப்பிடங்களில் நாம் எமது சுதந்திர உணர்வை கொண்டாடுவோம். தமிழ் மொழிக்கு உரிய மரியாதையை தராத இலங்கை முழுமையான இலங்கை நாடல்ல.       
தமிழர்களையும், முஸ்லிம்களையும் மொழி, மத, இன அடிப்படைகளில் தூரத்தள்ளி வைத்து, இரண்டாம், மூன்றாம் தர பிரஜைகளாக நடத்தும் இன்றைய அரசாங்கத்துக்குள்ளே அடைக்கலம் புகுந்து, இந்த இனவாத அரசுக்கு ஒரு ஏற்புடைமை ஏற்படுத்தி கொடுக்க முயலும் தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகளை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது”
இலங்கையின் 73 ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் வியாழக்கிழமை 4 ஆம் திகதி சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ளது.
குறித்த சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு கடந்த திங்கட்கிழமை இணையவழியூடாக நடைபெற்றது.
இதன் போது கருத்து தெரிவித்த பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்ன, இம்முறை சிங்கள மொழியில் மாத்திரமே தேசிய கீதம் இசைக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
Previous article“இராணுவ சர்வாதிகாரம் மேலோங்கினால் அதனை கடுமையாக எதிர்ப்போம்”
Next articleஆர்ப்பாட்டத்துக்கு முஸ்லிம்களும் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் – ரிஷாட் பதியுதீன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here