பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மீதான குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை – ஆணைக்குழு சேவையாளர்களின் சங்கம் தெரிவிப்பு

(அப்துல் ரகுமான்)
“மின் உற்பத்தி திட்டங்களை செயல்படுத்த தாமதம்” என்ற குற்றச்சாட்டினை ஆதாரமற்றது என்றும் அது முற்றிலும் தவறான அறிக்கை என்றும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சேவையாளர்கள் யூனியன் இன்று (17) வெளியிட்டுள்ள விஷேட ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது இலங்கை மின்சாரச் சட்டத்தின்படி, மின் உற்பத்தித் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்குவதற்கும் (Request For Proposal) திட்டங்கள் மற்றும் மின்சார கொள்முதல் ஒப்பந்த கோரிக்கையை அங்கீகரிப்பதும் (Power Purchasing Agreement) ஆணைக்குழுவின் பொறுப்பாகும். அதன்படி, குறைந்த விலையில் மின் உற்பத்தி நிலையங்களை அமைக்க இலங்கை மின்சார சபைக்கு ஆணைக்குழுவானது முழு ஆதரவையும் ஒப்புதலையும் வழங்கியுள்ளது.
இலங்கை மின்சார சபையானது, நீண்ட கால குறைந்த செலவுடனான மின் உற்பத்தி நிலையங்களை அமைக்கும் திட்டத்தின் கீழ் 2016-2020 காலகட்டத்தில் 300 மெகாவாட் மின் உற்பத்தி நிலையங்களை அமைக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் ஒப்புதல் கோரியது. இது தொடர்பாக ஆணைக்குழு எடுத்த நடவடிக்கைகளும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
முதல் திரவ இயற்கை எரிவாயு (LNG) மின் உற்பத்தி நிலையம்
இந்த 300 மெகாவாட் திறன் கொண்ட முதல் திரவ இயற்கை எரிவாயு (LNG) மின் உற்பத்தி நிலையத்தை நிர்மாணிப்பதற்காக விலைமனு கோரலுக்கான ஒப்புதல் கோரிக்கை (Request For Proposal) இலங்கை மின்சார சபையால் 15.11.2016 ஆம் திகதி இலங்கையின் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரப்பட்டது இதற்கான ஒப்புதலை இரண்டு நாட்களுக்குள் 17.11.2016 ஆம் திகதி ஆணைக்குழுவால் ஒப்புதல் வழங்கப்பட்டது. இருப்பினும், விலை மனுகோரல் நடவடிக்கைக்காக நான்கு (04) ஆண்டுகள் தாமதத்திற்குப் பின்னர் மீண்டும் மின்சார கொள்முதல் ஒப்பந்தம் (Power Purchasing Agreement) 2020.10.09 ஆம் திகதி அன்று அனுமதிக்காக ஆணைக்குழுவிற்கு அனுப்பப்பட்டிருந்தது. 2020.10.09 ஆம் திகதிக்கு பின்னர் கூடிய முதலாவது ஆணைக்குழு கூட்டத்தில் அதாவது 2020.11.25 ஆம் திகதி (47 நாட்களுக்குள்) இதற்கான அனுமதி வழங்கப்பட்டது.
இரண்டாவது திரவ இயற்கை எரிவாயு (LNG) மின் உற்பத்தி நிலையம்
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணையத்தால் நீண்ட கால உற்பத்தி திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட இந்த 300 மெகாவாட் திறன் கொண்ட இரண்டாவது திரவ இயற்கை எரிவாயு (LNG) மின் உற்பத்தி நிலையத்தை நிர்மாணிப்பதற்கான ஏலங்களை கோருவதற்கு இலங்கை மின்சார வாரிய இயக்குநர்கள் குழு 29.06.2017 அன்று முடிவு செய்திருந்தாலும், மூன்று ஆண்டுகளுக்கு மேலாக தாமதமான பின்னர், இந்த மின் உற்பத்தி நிலையம் 18.09.2020 அன்று மூடப்படும் முன்மொழிவுக்கான கோரிக்கைக்கு ஆணையத்தின் ஒப்புதல் கோரப்பட்டுள்ளது. அதன்படி, ஆணைக்குழு அதன் ஒப்புதலை ஒரு மாத காலத்திற்குள் அதாவது 22.10.2020 ஆம் திகதி ஒப்புதலை வழங்கியுள்ளது மற்றும் இலங்கை மின்சார சபையானது இன்று வரை விலைமனுகோரலை கேட்கவில்லை.
01 மற்றும் 02 ஆகிய இரண்டு சந்தர்ப்பங்களிலும், நாட்டிற்கும் நாட்டின் மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் இலங்கை மின்சாரசபையால் ஆணைகுழுவிடம் முன்வைக்கப்பட்ட ஒப்புதல்களுக்கு தேவையான திருத்தங்களை மேற்கொண்டதன் பின்னர் ஒப்புதல்கள் வழங்கப்பட்டன.
300 மெகாவாட்டில் நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தை விரிவாக்கல் (Extension)
ஆணைக்குழு ஒப்புதல் அளித்த 2018-2037 ஆண்டுக்கான நீண்ட கால மின் உற்பத்தி திட்டத்தின்படி, 2022/12/31 ஆம் திகதிக்குள் 300 மெகாவாட் நிலக்கரி மின் உற்பத்தி நிலையம் நிர்மாணித்து முடிக்கப்பட வேண்டுமானால், 2018 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் ஆணைகுழுவிடம் ஒப்புதல் பெறப்பட வேண்டும். ஆனால், இரண்டு வருட கால தாமதத்துக்கு பின்னர் இந்த மின்நிலையத்தை நிர்மாணிப்பதற்கான விலைமனு கோரலை, கொள்முதல் சட்ட நடைமுறைக்கு மாறாக போட்டி இல்லாத முறையில் ஒரு தரப்புக்கு விலைமனுவை வழங்குவது தொடர்பாக 04.09.2020 ஆம் திகதி ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்கப் பட்டுள்ளது.
ஆனால் இந்த கொள்முதல் தொடர்பாக இலங்கை மின்சார சட்டத்தின் உறுப்புரைகளுக்கு அமைவாக விளக்கம் கோரி ஆணைக்குழு 15.10.2020 ஆம் திகதி ஒரு கடிதத்தை இலங்கை மின்சார சபைக்கு அனுப்பியுள்ளது. இருப்பினும், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைகுழுவிற்கு உறுப்பினர்கள் இன்னும் நியமிக்கப்படாத காரணத்தினால், பதில் கடிதம் அனுப்ப தேவையான நடவடிக்கை எடுக்க ஆணைக்குழுவால் முடியவில்லை.
மின் உற்பத்தி நிலையங்களுக்கான திட்டங்களையும் அந்த மின் உற்பத்தி நிலையங்களை நிர்மாணிப்பதற்கான விலைமனு கோரல்களுக்கு ஒப்புதல் வழங்குவதன் தொடர்ச்சியாக அந்த திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக ஆணைக்குழு மேற்பார்வை செய்துள்ளது. 2016 ஆம் ஆண்டு முதல் மின் உற்பத்தி நிலையங்களை நிர்மாணிப்பதில் தாமதம் ஏற்படுவதாக அமைச்சரவை, தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சு மற்றும் மின் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு ஆகியவற்றுக்கு ஆணைக்குழு எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்புகளின் அடிப்படையில், மின் உற்பத்தி நிலையங்களை நிர்மாணிப்பதில் தாமதம் ஏற்பட்டதற்கான காரணம் மின் உற்பத்தி நிலையங்களுக்கான ஒப்புதல் வழங்குவதில் அல்ல, மின் உற்பத்தி நிலையங்களுக்கான விலைமனு கோரல்கள் மற்றும் அந்த மின் நிலையங்களை நிர்மாணிப்பதில் ஏற்பட்ட தாமதமே காரணம் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் 15.06.2017 ஆம் திகதி அன்று இலங்கை மின்சார சபைக்கு ஒரு கடிதத்தை சமர்ப்பித்துள்ளார்.
மேலும், அண்மைய காலங்களில் அவசர மின் உற்பத்தி நிலையங்கள் ஆணைக்குழுவின் ஒப்புதலைக் கோரியுள்ளன, ஆனால் அதிக விலைக்கு வாங்க அனுமதிக்கப்படவில்லை, அவை மக்களுக்கு சுமையாக இருக்கின்றன. சமீபத்திய காலங்களில் அவசரகால மற்றும் பிற மின் உற்பத்தி நிலையங்களுக்கான ஒப்புதல், அத்துடன் இலங்கையின் பொது பயன்பாட்டு ஆணைகுழுவால் ஒப்புதல் வழங்கிய நீண்ட கால மின் உற்பத்தி திட்டங்களும் மற்றும் மின் உற்பத்தி நிர்மாணத்துக்கான கொள்முதல் பணியில் தாமதமாகிவிட்ட மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் அநாவசிய அவசரகால கொள்முதல் செய்வதற்கு ஒப்புதல் வழங்காததால், ஆணைக்குழு பொதுமக்களுக்கு மீதப்படுத்திய (சேமித்த) பணம் குறித்த தகவல்களை எதிர்காலத்தில் வழங்க இருப்பதாகவும் அவ்வறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Previous articleஅவர்கள் எனக்கு பூரண ஒத்துழைப்பு தருகின்றனர் – திஹாரிய பொது சுகாதார பரிசோதகர்
Next article45 ஆயிரம் மின்னியலாளர்களின் நம்பிக்கைகள் சிதைந்தன – இலங்கை மின்னியளாளர்கள் சங்கம் தெரிவிப்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here