(அப்துல் ரகுமான்)
சிரேஸ்ட சட்டத்தரணியான ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்விற்கு எதிராக நிரூபிக்கக் கூடிய எதுவித சாட்சிகளும் இல்லாத நிலையில் 8 மாதங்களாக தடுத்து வைத்திருப்பது ஏன் என்று, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நேற்று பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.
ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் ஆஜரான வழக்குகள் தொடர்பான கோப்புகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக குறிப்பிட்ட அவர், சட்டத்தரணிகள் மற்றும் சேவை பெறுநர்களுக்கு இடையிலான இரகசியத்தன்மை தொடர்பிலும் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து அவர் குறிப்பிடுகையில், ஹிஸ்புல்லாஹ்விற்கு சுதந்திரமான முறையில் ஒரு சட்டத்தரணியை அனுகுவதற்கு கூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளதோடு அண்மையில் அவரது மனைவி ஒரு குழந்தையைப் பிரசவித்திருக்கும் நிலையில் அவரைப் பார்ப்பதற்குக் கூட அனுமதியளிக்கப்படவில்லை தெரிவித்தார்.
குறித்த சட்டத்தரணிக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய நிறுவனங்கள் இன்னும் இயங்கிக் கொண்டிருக்கும் நிலையில் இவர் மட்டும் எவ்வாறு குற்றவாளியாக முடியும் என்று வினா எழுப்பிய எம்.பி.சுமந்திரன் அவை அனைத்தும் பொய்யான குற்றச்சாட்டுக்கள் என்றும் தெரிவித்தார்.
அவர் ஒரு திறமையான சட்டத்தரணியாக இருப்பதனால் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. , ஒரு சட்டத்தரணிக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண மக்களின் நிலை என்னவாக இருக்கும் என இதன்போது சுமந்திரன் எம்.பி. தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.