கொலைச் சம்பவமொன்றில் மரண தண்டனைக் கைதியாக உள்ள பிரேமலால் ஜயசேகரவுக்கு பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்து, பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ள அனுமதிக்குமாறு சிறைச்சாலைகள் திணைக்களத்துக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதவான் ஏ.எச்.எம்.டி. நவாஸ் மற்றும் சோபித ராஜகருணா உள்ளிட்ட மேன்முறையீட்டு நீதியரசர்கள் குழாம் இந்த இடைக்கால தடையுத்தரவை விதித்துள்ளது.
2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் துப்பாக்கிச் சூடு நடத்தி ஒருவரைக் கொலைச் சம்பவத்தில் குற்றவாளியான பிரேமலால் ஜயசேகர உட்பட மூவருக்கு இரத்தினபுரி மேல்நீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் 31ஆம் மரண தண்டனை வழங்க உத்தரவிட்டது.
அத்தோடு, ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பிரேமலால் ஜயசேகர வெற்றியீட்டி, பாராளுமன்றம் தெரிவாகியுள்ளதால், பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ள அனுமதிக்குமாறு, சபாநாயகர் சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.