இலங்கை மனித உரிமைகள் தொடர்பில் கொண்டுள்ள கரிசனைகள் மற்றும் கடந்த கால சம்பவங்கள் தொடர்பில் முன்னெடுக்கும் நியாயமான அர்த்தமுள்ள நடவடிக்கைகள் மீதே இலங்கையின் எதிர்காலம் தங்கியுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்கள பேச்சாளர் எட்வார்ட் நெட் ப்ரய்ஸ் தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் பதிவொன்றினூடாக அவர் அதனை வெளிப்படுத்தியுள்ளார்.
இந் நிலையில், இலங்கையின் மனித உரிமைகள் நிலைமைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை வௌியிட்டுள்ள அறிக்கையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இந்த நிலையில், இலங்கை தொடர்பிலான அறிக்கையை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்சலட் அண்மையில் வௌியிட்டிருந்தார்.
இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட பாதுகாப்பு தரப்பினர் மற்றும் அரச ஊழியர்களை பதவிகளில் இருந்து நீக்குமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் குறித்த அறிக்கை ஊடாக பரிந்துரைத்துள்ளார்.
அனைத்து மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும் உடனடியாக, விரிவான பக்கசார்பற்ற விசாரணைகளை முன்னெடுக்குமாறும் தனது வருடாந்த அறிக்கையில் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நீண்ட கால வழக்குகளுக்கும் பொறுப்புக்கூறும் விடயத்திற்கு அதிக முக்கியத்துவம் வழங்குமாறும் இலங்கை அரசாங்கத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.
பொறுப்புக்கூறலை பலப்படுத்தி உறுதிப்படுத்தும் வகையில் பாதுகாப்பு விடயத்தில் மறுசீரமைப்புகளை அமுல்படுத்துமாறும் மிச்செல் பச்சலட் அரசாங்கத்திற்கு பரிந்துரைத்துள்ளார்.
இவ்வாறான பின்னணியிலேயே, இலங்கையின் மனித உரிமைகள் நிலைமைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை வௌியிட்டுள்ள அறிக்கையை உன்னிப்பாக அவதானித்தி வருவதாக அமெரிக்க இராஜாங்க திணைக்கள பேச்சாளர் எட்வார்ட் நெட் ப்ரைய்ஸ் குறிப்பிட்டுள்ளார்.